Tuesday, 7 January 2014

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!



எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


            மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


            எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


           மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


           உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


       முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


           பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

நம்பிக்கை....?


நம்பிக்கை

'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவித தொல்லையும் உனக்கு இருக்காது.


பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை  அனுபவிக்க வேண்டியவன் அவனே.


மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பி விட்டால், உன்னை பொறுத்தவரை காதல் சுகமாகி விடும்.


தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.


வேலைக்காரனையும் நம்பி விட வேண்டும்; அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற்காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே.


நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.


'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறை தீர்ப்பு.


வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை, புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.


கொலம்பஸ்ஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தை தந்தது.


ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது  உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியை தேடி தந்தது.


கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக் கொண்டிருந்தான் என்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தான் என்றும் நான் படித்திருக்கிறேன்.


நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகி இருப்பான்.


பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.


கண்ணனின் நம்பிக்கை பாரத போரில் வெற்றிப் பெற்றது.


நான் முன்னேறியது  படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.


அப்போது எனக்கு பதினான்கு வயது. கவிதை எழுதுவதில் எனக்குக் கொள்ளை ஆசை.


ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நான்கு வரி எழுதினேன்;


வீணா கானம் விடியுமுன் கேட்டது;
கானாமிர்தம் காதுக்கினிமை !
தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்!
படுக்கையிலிருந்தே பருகினேன் அமுதம்!


--- இந்த நான்கு வரிக்கு மேல் எழுத தெரியவில்லை. விட்டுவிட்டேன்.


பதினேழாவது வயதில் முதன் முதலாக முழுக் கவிதை எழுதினேன். அந்த வயதிலேயே ஒரு பத்திரிக்கையில் ஆசிரியரானேன்.


ஒரு நண்பர் எத்தனை ஆயிரம் ரூபாய் இருந்தாலும் என்னிடம் கொடுத்து வைப்பார்-- நம்பிக்கை.


நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறவன் பெரும் தண்டனைக்கு ஆளாவான்--காண்ணாரக் கண்டிருக்கிறேன்.


என்னிடம் அநியாயமாகப் பணம் வாங்கியவர்கள், அந்த பணத்தை நியாயமாக செலவழித்தது இல்லை;  அது துரோகத்துக்கு தண்டனை.


தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னை புகழும்.


'இது நம்மால்  முடியும்' என்று எண்ணு; முடிந்துவிடும்.


மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!


ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்குப் புகழும், பொருளும் வந்து சேரும்.


கடலைக்  கடக்க கப்பலை தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.


இவற்றுள் தலையாயது  தெய்வ நம்பிக்கை.


தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்க செய்கிறது.


மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலேயே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.


நம்பிக்கை உடையவன் தான் வேதந்தியானான், விஞ்ஞானியானான்.


நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.


தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால் தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் இனிக்கும்.


நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.


அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்க தேவை இல்லை.

-கவியரசு கண்ணதாசன்